கணவனைக் கொன்றார் மனைவி - கடலில் போட்டார் கள்ளக் காதலன்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கள்ளகாதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீட்டில் புதைத்தார் மனைவி. அந்த உடல் பாகங்களை தினசரி கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது கடலில் போட்டு வந்துள்ளார் அவரது கள்ளக் காதலன்.
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி களஞ்சிய ராணி (28). இவர்களுக்கு திருமணாகி ஒரு மகன் உள்ளான்.
அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (28). இவர் மீனவர். இவருடன் களஞ்சிய ராணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது கணவர் களஞ்சிய ராணியை கடுமையாக கண்டித்தார்.
ஆனால் களஞ்சிய ராணி அவரது பேச்சுக்கு கட்டுப்பட மறுத்து தனது கள்ள காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டால் வேலுவுடன் தொடர்ந்து உல்லாசமாக வாழலாம் என நினைத்த களஞ்சிய ராணி, சரவணனை கொலை செய்து துண்டு துண்டாக வீட்டில் புதைத்து வைத்தார்.
அந்த உடல் பாகங்களை, வேலு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்துள்ளார்.
இந்த நிலையில், தனது கணவனை காணவில்லை என்று களஞ்சிய ராணியே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
களஞ்சிய ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கள்ளகாதலன் வேலுவுடன் இணைந்து கொலை செய்து கடலில் வீசியதை களஞ்சிய ராணி ஒப்புக்கொண்டார்.
அதன் பேரில் களஞ்சிய ராணியை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் வேலு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.