ஆப்கனில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல் - 21 பேர் பலி
காந்தஹார்: ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் போலீஸ் அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருஸ்கான் மாகாணத்தின், தே ராவூத் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில், நடந்த போலீஸ் ரோந்தின்போது, உள்ளே புகுந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி,தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். மேலும், அங்கிருந்த பல கடைகள் முற்றிலும் அழிந்து போயின.
இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு தலிபான்தான் காரணம் என போலீஸ் துறை தலைவர் ஹமாத் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்புதான் காபூலில் இந்திய தூதரகம் மீதுதற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருப்பது பதட்டத்தைக் கூட்டியுள்ளது.
--