பாக் ஓபாமாவுடன் வைகோ சிகாகோவில் சந்திப்பு
சிகாகோ: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான பாரக் ஓபாமாவை சிகாகோவில் சந்தித்துப் பேசினார்.
சிகாகோ சென்றிருந்த வைகோ, அங்கு நடந்த பாரக் ஓபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஓபாமாவை சந்தித்து, மகாத்மா காந்தி அவதரித்த இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக தன்னைவைகோ அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து அவருடன் ஆர்வமாக பேசியுள்ளார் ஓபாமா. அப்போது, எஸ், வி கேன் என்ற தலைப்பில் தான் எழுதிய ஆங்கில நூலை ஓபாமாவிடம் காட்டினார் வைகோ. இது ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலாகும்.
அந்த நூலில் டூ வைகோ, எஸ், வி கேன் என்று எழுதி கையெழுத்திட்டார் ஓபாமா.
பின்னர் அந்த நூல்குறித்து வைகோவிடம் ஆர்வத்துடன் வினவினார். அதுகுறித்து வைகோ ஓபாமாவிடம் விளக்கினார். ஒரு மாணவராக, ஒரு சமுதாய ஒருங்கிணைப்பாளராக, ஒரு எம்.பியாக பாரக் ஓபாமா செயல்பட்ட விதம், சந்தித்த சவால்கள், போராடிய போராட்டங்கள் குறித்து இந்த நூலில் விளக்கியிருப்பதாக வைகோ கூறவும், அதைக்கேட்டு வியந்துள்ளார் ஓபாமா.
பின்னர் ஓபாமாவிடம் வைகோ கூறுகையில், நீங்கள் அமெரிக்க அதிபர் நாற்காலியில் உட்காரும்போது, ஹாரியட் பீச்சர்ஸ்டவ், மேடம் ரோசா பார்க்ஸ், ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கண்ட கனவுகள் நனவாகும்.
உலகம் முழுவதும் பெரும் மாற்றத்ைத உங்களது தேர்வு கொண்டு வரும். உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் உங்களது தேர்வால் மகிழ்ச்சி அடைவர். அவர்களுக்கு புதிய விடியல் உதயமாகும்.
உங்களது அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் பெரும் வெற்றி பெற இயற்கை அன்னையை வணங்கி வேண்டுகிறேன் என்றார் வைகோ.
ஓபாமாவை சந்தித்த முதல் தமிழக அரசியல் தலைவர் வைகோதான் என மதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.