கருணாநிதி மகள் செல்வி திடீர் சுகவீனம்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி. மறைந்த முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வத்தை மணந்துள்ளார். பெங்களூரில் வசித்து வருகிறார்.
கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசலைப் போக்க கடுமையாக முயன்று வருகிறார். ஆனால் மு.க.அழகிரியின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரை அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தனது தாயார் தயாளு அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து அவரைப் பார்க்க சென்னைக்கு வந்துள்ளார்.
நேற்று பிற்பகலில் அவர் உடல் நலம் பாதித்த நிலையில் செயின்ட் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரது உடல் நல பாதிப்புக்கு என்ன காரணம் என்று மருத்துவமனை வட்டாரத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால்அவர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
--