தேர்தலுக்கு பாஜக தயார்-அருண் ஜேட்லி
விருந்தாவன்: கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிரச்சனைத் தீர்த்துக் கொள்ளும் கெளண்டராக (counter) பிரதமர் அலுவலகம் மாறி்ப் போய்விட்டது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எம்பிக்களை விலைக்கு வாங்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறுகையில்,
மாண்புமிகு பிரதமர் அலுவலகம் இரு தொழில் நிறுவனங்களின் சண்டையில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது துரதிஷ்டவசமானது.
லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. நான்காண்டுகால மட்டமான ஆட்சியால் மக்களை சந்திக்க அந்தக் கட்சிக்கு பயம்.
இதனால் தான் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை விலைக்கு வாங்கியாவது நம்பிக்கை தீர்மானத்தில் வெல்ல காங்கிரஸ முயல்கிறது. இதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து நடந்து கொள்ள அந்தக் கட்சி தயாராகிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் தான், கார்பரேட் சண்டையில் பிரதமர் தலையிட்டதும், சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்ததும்.
நவம்பரில் தேர்தல் வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச்சில் தேர்தல் வந்தாலும் சந்திக்க பாஜக ரெடி, எப்போது தேர்தல் வந்தாலும் பாஜக வெல்லும். அரசியல், எண்ணிக்கை, கூட்டணி நிலைமை அப்படியிருக்கிறது.
நாட்டின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமான அமர்நாத் கோவிலுக்கு தரப்பட்ட நிலத்தை சில தேச விரோத சக்திகளின் நெருக்கதலால் திரும்பப் பெற்றது, ராமர் பாலத்தை உடைக்க முயன்றது ஆகியவை மக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.
மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க காங்கிரசிடம் எதுவுமே இல்லை. விலைவாசி உயர்வை மறக்கவோ மன்னிக்கவோ மக்கள் தயாராக இல்லை.
நாட்டை பாஜகவாலும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானியாலும் மட்டுமே காப்பாற்ற முடியும்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் லோக்சபா வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக சில வாரங்களில் வெளியிடும். மொத்தமுள்ள 80 இடங்களில் பெரும்பாலானவற்றில் பாஜகவே போட்டியிடும் என்றார் ஜேட்லி.