'யு-டர்ன்' அடிக்கும் கட்சிகள்-கெளடா கோபம்!
டெல்லி: மக்களவையில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதா எதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து வரும் 18ம் தேதி முடிவெடுக்கவுள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கெளடா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பது குறித்து பல யூகமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனது கட்சியின் நாடாளுமன்றக் கடமைகளை நான் அறிவேன். வரும் வெள்ளிக்கிழமை பெங்களூரில் கூடும் எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் தான் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
சந்தர்ப்பவாதி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் என்னைப் பற்றி விமர்சிக்கின்றன.
10 மாதம் 20 நாட்கள் ஆட்சியில் இருந்த என்னை பாஜகவும் காங்கிரசும் கூட்டு சேர்ந்து தான் கவிழ்த்தன. அப்போது மதவாத சக்திகளோ அல்லது மார்க்கெட் சக்திகளோ கொடுத்த நெருக்கடிகளுக்கு நான் பணியவில்லை என்பதில் இப்போதும் எனக்குப் பெருமை தான்.
இப்போது நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் பார்த்து நான் கவலைப்படுகிறேன். அரசியல் கொள்கைகளும், கூட்டணிகளும், சார்புகளும் இரவோடு இரவாக 'யு-டர்ன்' அடிக்கின்றன.
அரசியல் எதிரிகளை பழி வாங்க அரசியல் சட்ட பதவிகளே (பிரதமர்) கூட நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு, வளைக்கப்படுகின்றன. நாகரீகமான ஜனநாயகத்துக்கு இதைவிட பெரிய ஆபத்து ஏதுமில்லை என்று கூறியுள்ளார் கெளடா.
கெளடாவிடம் 3 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரிகள் சந்தர்ப்பவாதம்: பாஸ்வான்
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு சேர்ந்திருப்பது அரசியல் சந்தர்ப்பவாதம் என லோக் ஜனசக்தி தலைவம் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்பு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்த பாஜக இப்போது அதை எதிர்க்கிறது.
மக்களவையில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசை கவிழ்க்க, பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக கட்சிகளின் ஆதரவைப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் முயன்று வருகின்றன. இது இடதுசாரிகளின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கிவிட்டது என்றார்.