வாக்களிக்க முடியாத பிரதமர்-சோம்நாத் நடுநிலை வகிக்க ஜேத்மலானி கோரிக்கை
டெல்லி: மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப் போகும் பிரதமர் மன்மோகன் சிங், அந்தத் தீர்மானத்தில் மீது வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளார்.
இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் தனது ஆட்சியைத் தக்க வைக்க மக்களவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரது தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், மக்களவையில் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்பியாக உள்ள பிரதமர் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சோம்நாத் வாக்களிக்க கூடாது-ஜேத்மலானி:
அதே போல மக்களவை சபாநாயகராக உள்ளவர் அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கக் கூடாது என மூத்த வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் சோம்நாத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
தனது கட்சியைச் சேர்ந்தவரான சோம்நாத் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரி வருகிறது. அதே போல ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டு வருகிறது.
போட்டி மிகக் கடுமையாக உள்ளதால் ஒவ்வொரு எம்பியின் ஓட்டும் மிக மிக முக்கியமானதாக உள்ளது. இந் நிலையில் சோம்நாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க வேண்டும் என ஜேத்மலானி கூறியுள்ளார்.