முகேஷ்-அனில் சமரசத்துக்கு பிரதமர் முயற்சி?
டெல்லி: முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையிலான மோதலில், சிக்கலைத் தீர்க்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிடவும் இல்லை தலையிடவும் மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசைக் காப்பாற்ற அனில் அம்பானிக்கு நெருக்கமான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்- பொதுச் செயலாளர் அமர்சி்ங் ஆகியோர் முயன்று வருகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக சமாஜ்வாடி தரப்பு போட்டுள்ள சில நிபந்தனைகள் முகேஷ் தரப்பை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை கையில் வைத்துள்ள முகேஷின் லாபத்தை குறைக்கும் வகையில், இந்திய தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோலிய ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், இந்த நிறுவனங்கள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என அமர்சிங் கோரி வருகிறார்.
முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறி வருகிறார்
மேலும் ரிலையன்ஸ் மொபைலை கையில் வைத்துள்ள அனிலுக்கு உதவும் வகையில், செல்போன் துறையில் வெளிநாட்டு முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி வருகிறார்.
இதையடுத்து அனில்-அமர்சிங்கை பலமிழக்கச் செய்ய சமாஜ்வாடி கட்சியை உடைக்க முகேஷ் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது காங்கிரஸ் தரப்பை எரிச்சலாக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசினார். அப்போது சமாஜ்வாடியை உடைக்கவோ, அதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்கவோ தான் முயலவில்லை என முகேஷ் விளக்கியதாகத் தெரிறது.
மேலும் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பிரதமர் தலையீடா?:
இந் நிலையில் முகேஷ்-அனில் இடையே சமரசம் ஏற்படுத்த பிரதமர் முயன்று வருவதாக தகவல் பரவியுள்ளன. ஆனால், இதை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் பாரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் சந்திப்பதும், தேசிய பொருளாதார விவகாரங்கள் குறித்து பேசுவதும் வழக்கமானது தான். கார்பரேட் விவகாரங்களில் எல்லாம் பிரதமர் தலையிடவும் இல்லை, தலையிடவும் மாட்டார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் எம்டிஎன் செல்போன் நிறுவனத்தை அனில் அம்பானி வாங்க விடாமல் தடுத்து வருகிறார் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனிலின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தாத்ரியில் அமைக்கவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்துக்கு கேஸ் வழங்க முகேஷின் ரிலையன்ஸ் கேஸ் மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.