மும்பை பங்கு சந்தையில் 717 புள்ளிகள் வீழ்ச்சி!
இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த உடனே பங்குகள் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே 402.41 புள்ளிகள் விழுந்தது மும்பை பங்குச் சந்தையில். இந்த ஆண்டு 13 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் பங்குச் சந்தை குறியீட்டெண் குறைவது இதுவே முதல்முறை.
நிப்டியிலும் வர்த்தக நேர முடிவில் 184.35 புள்ளிகள் குறைந்தது. புளூ சிப் நிறுவனப் பங்குகள் எனப்படும் இன்போசிஸ், ரிலையன்ஸ் மற்றும் எச்டிஎப்சி போன்றவற்றின் விலைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் 7 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது. எண்ணெய் நிறுவன பங்குகளின் விலை மட்டும் ஒரளவு தாக்குப் பிடித்து வருகிறது.
டாடா கன்சல்டன்ஸி நிறுவனப் பங்குகள் ரூ.23 வரை குறைந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.59 வரை விலை குறந்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் ரூ.33 வரை குறைந்துள்ளன. தென் ஆப்ரிக்காவின் எம்டிஎன் தன் பங்குகளை ரிலையன்சுக்கு விற்கப் போவதில்லை என தகவல் பரவி வருவதை அடுத்து இப்பங்குகளின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இப்பங்குகளை வாங்கப் போவதாகச் சொல்லப்படும் பார்தி ஏர்டெல்லின் பங்குகள் விலையும் ரூ.33 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்டிஎப்சியின் பங்குகள் ரூ.150 வரை விலை குறைந்தன. இந்த நிறுவனத்தின் எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் ஒன்றுக்கு ரூ.117 வரை வீழ்ச்சியைச் சந்தித்தது.
இன்றைய நாளின் முடிவில் சென்செக்ஸ் 12612 .77 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 3837.20 புள்ளிகளில் முடிவுற்றது.
ஹாங்காங் பங்குச் சந்தையிலும் இதே நிலைதான். அங்கு ஒரே நாளில் 840 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.