சத்துணவு-முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம்
சென்னை: சத்துணவில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் பள்ளி்களில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி வைத்த நிலையில்
2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை நிறுத்தினார்.
2004ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் முட்டை வழங்கும் திட்டம் அமலானது. பின்னர் வாரத்துக்கு 3 முறை முட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை வேக வைத்த 20 கிராம் கொண்டை கடலை அல்லது பச்சை பயிறு வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இத் திட்டத்தால் பயன்பெறும் 71 லட்சம் குழந்தைகளில் 90,000 குழந்தைகள் முட்டை சாப்பிடுவதில்லை என்பதால் அவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்க அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முட்டை அருந்ததாக 90,000 குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1.4 கோடி கூடுதல் செலவாகும்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாதிரி மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பேசுகையில்,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவோம் என்று அறிவித்தோம். மேலும் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளை சட்டப்படி பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று சட்டம் இயற்றினோம்.
ஏன் சட்டத்தை மாற்ற முடியாதா என்று கேட்கலாம். அறிவிப்பை மாற்றுவது சுலபம். ஆனால் சட்டமாக இயற்றி விட்டால் அதை திரும்ப பெறவோ, மாற்றி அமைக்கவோ சட்டசபையை கூட்ட வேண்டும்.
சட்டசபை கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று கருணாநிதி கொண்டு வந்ததை குறிப்பிட்டு, அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். அவ்வாறு ரத்து செய்து விட்டு வெளியில் நடமாட முடியுமா என்பது வேறு விஷயம்.
மதிய உணவுத் திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது வரலாறு. 1925ம் ஆண்டு பள்ளிகளில் பசியோடு வரும் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து விடக்கூடாது. அவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக சர் பி.டி. தியாகராஜர் சென்னை மேயராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
சென்னையில் அது ஒரு பகுதியில் மட்டும் கொண்டு வரப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வரான பிறகு இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தினார்.
அவர் சுற்றுப்பயணத்தின் போது கிராமங்களில் ஏழை குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாமல் ஆடு, மாடு மேய்ப்பதை பார்த்து, அதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.
அந்த குழந்தைகள் படிக்கவும், பசியாறவும் வேண்டும் என்று பெற்றோர்கள் நல்ல உள்ளத்துடன் தந்த நன்கொடைகளை வைத்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் சத்துணவு திட்டம் என்ற பெயரில் மாநில அரசின் செலவில் சத்துணவு வழங்க ஆணையிட்டார்.
இன்றைக்கு அந்த திட்டம் எத்தனை முட்டைகளுடன் என்ற அளவில் பெருகியுள்ளது. இப்போது வழங்கப்படும் உணவுதான் சத்து நிறைந்த உணவு.
முதலில் ஒரு முட்டை வழங்கினோம். பின்னர் 2 முட்டை கொடுத்தோம். தற்போது 3 முட்டை வழங்கி வருகிறோம். இதுதான் உண்மையான சத்துணவு என்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
குழந்தைகளும் ஆர்வமாக கல்வி கற்கிறார்கள். இதில் ஒரு பிரச்சினை எழுந்தது. சைவ குழந்தைகள் முட்டை சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று கடந்த 2 ஆண்டுகளாக விவாதம் நடந்தது.
முட்டை சாப்பிடாதவர்களுக்கு ஆளுக்கு ஒரு வாழைப்பழம் வழங்கலாம் என்று முடிவு செய்தோம். இந்த திட்டத்துக்காக ரூ. 1.25 கோடி முதல் ரூ. 1.50 கோடி வரை கூடுதல் செலவாகலாம் என்று குறிப்பிட்டனர்.
இந்த செலவை அரசு பொருட்படுத்தாமல் இந்த புதிய திட்டத்தை ஏற்று அரசு செயல்படுத்துகிறது. முட்டை இல்லையே, வாழைப்பழம் தானே என்று யாராவது தவறு செய்ய நினைத்தால் அது குழந்தைகளுக்கு செய்யும் துரோகம் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
எந்த நல்ல எண்ணத்தோடு இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோமோ அந்த நல்ல எண்ணம் வெற்றி பெற அலுவலர்கள், ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வழங்குவது போல செயல்படுத்த வேண்டும்.
பழத்தின் பெயரே வாழைப்பழம். வாழைப்பழம் கொடுத்து குழந்தைகளை வாழ வையுங்கள் என்றார் கருணாநிதி.