ரிலையன்ஸை விட்டு ஏர்டெல்லுக்குத் தாவும் எம்டிஎன்!!
இப்போதைக்கு அம்பானிகளுடன் பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்திவிட்ட எம்டிஎன், தற்போது பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவருக்குமே எம்டிஎன்னின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தை விட பார்தி ஏர்டெல்லுடன் வியாபார உறவுகளை வைத்துக் கொள்வதே தங்களுக்குப் பாதுகாப்பானது. தேவையற்ற அரசியல் குறுக்கீடுகள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று எம்டிஎன் கருதுவதாலேயே இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் தி டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த டீலுக்காக முதலில் எம்டிஎன் தேர்ந்தெடுத்தது ஏர்டெல்லைத்தான். ஆனால், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த பின் தனது துணை நிறுவனமாக செயல்பட வேண்டும் என ஏர்டெல்லுக்கு எம்டிஎன் நிபந்தனை போட்டது. இந்த நிபந்தனையை ஏர்டெல் ஏற்கவில்லை.
இதையடுத்து தான் ரிலையன்சுடன் தனது பேச்சுவார்த்தையை எம்டிஎன் தொடங்கியது.
இப்போது மீண்டும் பழையபடி ஏர்டெல்லிடம் வந்து நிற்கிறது எம்டிஎன். காரணம் இதுதான் க்ளீன் டீல் என்கிறது டைம்ஸ்.
கடந்த வாரம் கூடிய எம்டிஎன் இயக்குநர்கள் குழுவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. ரிலையன்ஸின் டீல் மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்னும் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது என இக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்டிஎன் சொத்து பராமரிப்பு இயக்குநர், அம்பானி சகோதரர்கள் விரைவில் தங்களுக்குள் இருக்கும் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டு வரட்டும். இல்லையேல் எங்களை விட்டு விடட்டும். காரணம் இந்த நிறுவனம் தற்போது உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, என்றார்.
தென்னாப்பிரிக்காவை மையமாக்க் கொண்டு இயங்கும் எம்டிஎன் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்காளிச் சண்டையால எப்பவுமே நஷ்டம்தான்...