10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
யூக வர்த்தகத்தால் உலக அளவில் மிகக் கடுமையான அளவுக்கு பெட்ரோலிய எண்ணெய்யின் விலை உயர்ந்து வந்தது. டிமாண்ட்-சப்ளை இடைவெளியால் உயரும் விலையை உற்பத்தியை அதிகரித்தால் குறைக்க முடியும். ஆனால், அமெரிக்க சந்தையில் நடந்த யூக வியாபாரத்தில் உயர்ந்த விலையை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் (OPEC) கூட தடுக்க முடியாமல் போனது.
இப்படியே விலை உயர்ந்தால் விரைவிலேயே வாங்கும் சக்தி குறைந்து போய், டிமாண்டும் குறைந்து, பெட்ரோலிய விலையில் பெரும் சரிவு ஏற்படலாம் என opec நாடுகள் கூறி வந்தன. அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.
ஏற்கனவே தேக்கத்தில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் தேக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையலாம் என்ற பயமும் கூடவே பரவி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலையில் 10 டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவுக்கு விலை சரிந்தது கடந்த 17 ஆண்டுகளில் நடந்திராத அதிசயமாகும்.
ஆனாலும் பின்னர் நடந்த வர்த்தகத்தில் விலையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவு 4.5 டாலராக குறைந்தது. இதே போல தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை உயர்த்திய அதே யூக வர்த்தகம் தான் விலையை சரித்துள்ளது.
ஆனாலும், கடந்த சில ஆண்டுகளில் பல மடங்காகிவிட்ட கச்சா எண்ணெயின் விலையோடு ஒப்பிடுகையில் இப்போது ஏற்பட்டுள்ள சரிவு மிகக் குறைவானதே.
இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 138.69 டாலராக உள்ளது. இது 4 ஆண்டுகள் முன் 35 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.