அமர்சிங் சொல்றார்.. பிரதமர் செய்றார்..!
அதே போல ஜிஎஸ்எம் செல்போன் சேவையில் உள்ள நிறுவனங்கள் வசம் உள்ள கூடுதல் அலைவரிசைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆராயுமாறு தொலைத்தொடர்புத்துறைக்கும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டுமே அனில் அம்பானிக்கு சாதகமான உத்தரவுகள் என்பதும், முதல் உத்தரவு முகேஷ் அம்பானிக்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அனில் அம்பானியின் நண்பரான சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரசை ஆதரிக்க போட்டுள்ள நிபந்தனைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
(இது குறித்து கடந்த 8ம் தேதியே நாம் ஒரு கட்டுரை வெளியிட்டோம்.ஒரு டீலுக்கு பின்னால் பல டீல்கள்!!)
ஜிஎஸ்எம் சேவையில் உள்ள செல்போன் நிறுவனங்களிடம் 6.2 மெகாஹெர்ட்ஸ் ரேடியா அலைவரிசைக்கு மேல் உள்ள அனைத்து அலைவரிசைக்கும் கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கோரி ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
இதன்மூலம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு குறி வைத்தார் அனில். ஆனால், இதை இத்தனை நாட்களாக மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. இப்போது அமர்சிங் சொன்னதையடுத்து நடந்திருக்கிறது.
ஒரு மெகாஹெட்ஸ் அலைவரிசைக்கு ரூ. 1,312 கோடி என மார்க்கெட் விலையைப் போட்டால் பாரதி ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அரசுக்கு ரூ. 10,000 கோடி வரை கட்ட வேண்டி வரும். அரசுக்கு வருமானம் வருமே என்பதற்காகத் தான் இந்த யோசனையை சொன்னேன் என்கிறார் அமர்சிங் (ரொம்ப நல்லவரு..).
அதே போல தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் உபரி லாபத்தின் (Windfall profits) மீது வரி விதிக்க வேண்டும், அவை வெளிநாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமர்சிங் கோரியிருப்பதற்குக் காரணம் முகேஷிடம் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தை குறி வைத்துத் தான் என்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, முகேஷசுக்கு ஆதரவாக இருப்பதாக அமர்சிங் நினைப்பதால் தான் அவரையே நீக்க வேண்டும் என கோரி வந்தார்.
இப்போது அமர்சிங்கின் இரு முக்கிய கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் அந்ததந்த அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதைப் பார்த்தால், மத்திய அரசை இயக்க இடதுசாரிகளிடம் இருந்த 'பேட்டரி போன' ரிமோட், புல்-சார்ஜ் ஆகி அமர்சிங்கிடம் வந்துவிட்டது புரிகிறது.