நக்சல்கள்-போலீசாருக்கு எஸ்டிஎப் சிறப்பு பயிற்சி
கோவை: தமிழகத்தில் நக்சல்களை ஒடுக்கவும் அவர்களது மிரட்டலை எதி்ர்கொள்ளவும் போலீசாருக்கு, அதிரடிப் படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீசாருக்கு ஈரோடு சத்தியமங்கலம் வனப் பகுதியில் கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 1,000 போலீசாருக்கு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏ.கே 47 மற்றும் நவீன ரக துப்பாக்கிகளை கையாளுவது, காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை டிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான அதிரடிப் படையினர் அளித்து வருகின்றனர்.
இங்கு பயி்ற்சி முடித்த பின் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் அடுத்த கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைகளை கண்காணிக்க கேமரா:
இதற்கிடையே சென்னையில் இருந்தவாரே தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை கேமரா மூலம் கண்காணிக்கும் திட்டத்தை அரசு அமலாக்கவுள்ளது.
முதல் கட்டமாக வேலூர் சிறையில் ரூ. 80 லட்சம் செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. நடராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய சிறைகளில் தண்டனை குற்றவாளிகள், பயங்கரவாதிகள், போதைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாக புகார்கள் வருகின்றன.
சிறைக் காவலர்கள் உதவியுடன் சிறைக்குள் போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதைத் தடுக்க இந்த கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டது.
வேலூர் சிறையில் உள்ள கேமராக்களை சென்னை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறையில் உள்ள கட்டுப்பாடு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.
அடுத்து சென்னை புழல் மத்திய சிறை-1, மத்திய சிறை-2, பாளையங்கோட்டை, கோவை, சேலம், வேலூர், மதுரை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, புழல் மத்திய சிறை-3 ஆகியவற்றிலும் இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.