இந்தியாவும் சீனாவும் பூமியையே எரித்துவிடுவார்கள்!-கிளிண்டன்
வாஷிங்டன்: இன்று இந்த பூமியை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து வளர்ந்து வரும் இந்தியாவும் சீனாவும்தான். இந்த இரு நாடுகளும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதை உடனே ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இவர்களால் உலகம் அழியப் போவது உறுதி, என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.
ஏபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கிளிண்டன் கூறியிருப்பதாவது:
உலக சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் நச்சுக்களை வெளியிடுவதில் சீனாதான் இப்போது முதலிடத்தில் உள்ளது. அங்கே, 10 நாளைக்கொரு புதிய அனல் மின் நிலையங்கள் உருவாகி வருகின்றன.
இவை அனைத்தும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துபவை. அவர்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வருவதாகத் தெரியவில்லை.
ளரும் நாடுகளைப் பொருத்தவரை, வளர்ந்த நாடுகள் தங்களை இரண்டாம் நிலையில் அழுத்தி வைத்திருப்பதாக ஒரு உணர்வு நிலவுகிறது.
இந்தியாவும் அதே எண்ணத்தில்தான் செயல்படுகிறது. அதனால்தான் ஒருவித வெறியோடு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
விரைவில் இந்த நாடுகள் தங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், இந்தியா- சீனா ஆகிய இரு நாடுகளுமே போதும், இந்த பூமியை எரித்துவிட..., என்று கூறியுள்ளார் கிளிண்டன்.
சில தினங்களுக்கு முன்புதான், உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகம் சாப்பிடுவதாகவும் அதனால் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம் உள்ளதாகவும் இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறியது நினைவிருக்கலாம்.