அணு ஒப்பந்தத்துக்கு பாஜக இளம் எம்பிக்கள் ஆதரவு?
டெல்லி: காங்கிரஸ் எம்பிக்களை பாஜக வளைத்து வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த சில எம்பிக்களை இழுக்க காங்கிரசும் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரான ஆர்.கே. தவான் தலைமையிலான டீம் , பாஜகவில் அதிருப்தியில் உள்ள எம்பிக்களை பட்டியலிட்டுக் கொண்டு அவர்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தியும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளில் உள்ள இளம எம்பிக்களுடன் பேசி அரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. சில பாஜக எம்பிக்கள் அரசை ஆதரிக்க தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அமேதியில் நிருபர்களிடம் பேசிய ராகுல்,
அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு நன்மை தரக்கூடியது. அதை அமல்படுத்த முடிவு செய்த பிரதமர் மன்மோகன் சிங்கின் துணிச்சலை பாராட்டுகிறேன். இந்த ஒப்பந்தத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க காங்கிரஸ் தயார்.
அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு. இந்தியாவின் எதிர்கால எரிசக்தி மற்றும் அணுசக்தி துறைக்கு இந்த ஒப்பந்தம் அவசியம். உலகின் பெரிய நாடாக இந்தியா உருவாவதற்கு இந்த ஒப்பந்தம் தேவை.
எதிர்க்கட்சிகளில் உள்ள பல இளம் எம்.பிக்களுடனும் பேசினேன். அவர்களும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தருகின்றனர்.
என் தந்தை கம்ப்யூட்டர் புரட்சியை ஏற்படுத்தினார். அப்போதும் இதுபோன்ற எதிர்ப்பு கிளம்பியது. கம்ப்யூட்டரால் விவசாயிகளுக்கு என்ன பயன் என கேட்டனர். ஆனால் இப்போது அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கிறோம்.
அது போலவே அணு சக்தி ஒப்பந்ததாலும் நாட்டில் பெரும் புரட்சி ஏற்படும்.தற்போது 3 சதவீதம் மட்டுமே அணுசக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது 70 சதவீதமாக மாறும் என்றார் ராகுல்.