சென்னை போலீஸுக்கு மீண்டும் சவால்-இன்றும் ஒருவர் கொலை!
சென்னை: சென்னை போலீஸாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியிலும் இன்றும் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வட பழனி பகுதியில் அடுத்தடுத்து காவலாளிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. கடந்த திங்கள்கிழமை மேற்கு மாம்பலத்தையும் இந்த மர்மக் கொலை தாக்கியது.
மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில், பேப்பர் பொறுக்கும் இளைஞர் மர்மமான முறையில் எரித்துக்கொல்லப்பட்டார். பாதி எரிந்த நிலையில் அவரது உடலை போலீஸார் கைப்பற்றினர்.
வடபழனி, அசோக் நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் இதுவரை ஐந்து பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இது போலீஸாருக்கு பெரும் சவாலான விவகாரம். இதை முடிவுக்குக் கொண்டு போலீஸார் தீவிரமாகஉள்ளதாக காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்திருந்தார். சைக்கோ நபர்தான் இதற்குக் காரணம் எனவும் போலீஸார் கூறி வருகின்றனர்.
இதையடுத்து துணை ஆணையர்களின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் 300க்கும் மேற்பட்ட போலீஸார் கடந்த 2 நாட்களாக தீவிர இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸாருக்கு பெரும் சவாலாக இன்றும் ஒரு காவலாளி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
அசோக் நகர் 18வது அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் பாட்ஷா (50). இவர் தாம்பரத்தைச் சேர்ந்தவர். நேற்றுதான் இங்கு வந்து பணியில் சேர்ந்தார்.
இன்று அதிகாலையில் பாட்ஷா எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர்.
சென்னையின் மையப் பகுதியில் இரவு நேரங்களில் இப்படி அடுத்தடுத்து கொலை விழுவது மக்களிடையே பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவலாளி பாஷா கொல்லப்பட்ட இடத்திற்கு பின்புறம்தான் கே.கே.நகர் காவல் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காவல் நிலையத்திற்கு பக்கத்திலேயே நடந்துள்ள இந்தப் படுகொலையால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொலையாளிகள் யார், ஏன் இப்படி குறி வைத்துக் கொல்கிறார்கள் என்பதை போலீஸார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என பாட்ஷா கொல்லப்பட்ட அடுக்கு மாடிக்குடியிருப்பில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டமிட்டுத்தான் இந்தக் கொலைகள் நடப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.