For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஏஇஏ-இந்தியாவுக்காக தூதரை அனுப்பும் யு.எஸ்

By Staff
Google Oneindia Tamil News

William Burns
வாஷிங்டன்: இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு, விசேஷ தூதரை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாளை இந்தியா விளக்கம் அளிக்கவுள்ளது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள விசேஷ தூதரை அமெரிக்கா, வியன்னாவுக்கு அனுப்பி வைக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ்தான் அந்த விசேஷ தூதர். நாளை அவர் வியன்னா செல்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோர்மாக் கூறுகையில், வில்லியம் பர்ன்ஸ், வியன்னா செல்கிறார். ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனையை அவர் மேற்கொள்வார். இதற்கு மேல் விரிவான தகவல் என்னிடம் இல்லை என்றார்.

பர்ன்ஸ் வியன்னா செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட என்.எஸ்.ஜியில், இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்க பாடுபடப் போவதாகவும், ஒப்பந்தம் நிறைவேற இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில், வியன்னாவுக்கு விசேஷ தூதரை அமெரிக்கா அனுப்பி வைக்கிறது.

ஏற்கனவே சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு பாதுகாப்பு ஒப்பந்த நகலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ஏஜென்சியும் தனது போர்டு உறுப்பினர்களிடம் அதை சுற்றுக்கு விட்டுள்ளது. நாளை இதுகுறித்து இந்தியா நேரில் விளக்கவுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது.

நாளை சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு செல்லும் இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ். மேனன் தலைமை தாங்குகிறார்.

நாளைய கூட்டத்தில் ஏஜென்சியின் 35 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களிடம் ஒப்பந்தம் குறித்து மேனன் விளக்கம் அளிப்பார். 35 பேரில் 26 பேர் என்.எஸ்.ஜி. அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 18ம் தேதிதான் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டறிக்கை வெளியிட்டனர். நாளையுடன் அது 3வது ஆண்டை காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X