பாஜவுக்கு ஆதரவாக மாறிய உ.பி. சுயேச்சை எம்.பி.!
{image-sonai gandhi250_18072008.jpg tamil.oneindia.com}டெல்லி: உ.பி. மாநிலம் அம்ரோஹா தொகுதி சுயேச்சை எம்.பியான ஹரீஷ் நக்பால், பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நக்பால் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில்ஆதரவு எம்.பிக்களைத் திரட்டும் பணியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும் படுதீவிரமாக உள்ளன. பாஜக கூட்டணியும் ஆதரவு எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருக்கிறது.
சுயேச்சை எம்.பிக்களில் கணிசமானவர்களை இழுத்து விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ள நிலையில் உ.பி. மாநில சுயேச்சை ஒருவர் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார்.
அம்ரோஹா எம்.பி ஹரீஷ் நக்பால் நேற்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவரை செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு அறிமுகப்படுத்தினார். அப்போது நக்பால் கூறுகையில், மத்திய அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது. இதனால் நான் விரக்தி அடைந்து விட்டேன்.
விலைவாசி உயர்வு, பண வீக்கம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
இது என்ன மாதிரியான ஒப்பந்தம் என்று மக்களுக்கும் புரியவில்லை. எம்.பிக்களுக்கும் புரியவில்லை. எனவே இது நிச்சயம் நாட்டுநலனுக்கு உகந்ததல்ல என்ற எண்ணத்திற்கு நான் வந்துள்ளேன். எனவேதான் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தேன்.
பாஜகவின் செயல்பாடு என்னைக் கவர்ந்துள்ளது. எனவேதான் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். இருப்பினும் பாஜகவில் சேருவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை.
எனது ஆதரவைப் பெறுவதற்காக பாஜக எனக்கு பணம் எதையும் தரவில்லை என்றார் நக்பால்.