கொறடா உத்தரவு மீறல்: எல்.ஜி, செஞ்சியாரை நீக்க மதிமுக கோரிக்கை
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற மதிமுக கொறடா உத்தரவை மீறும் வகையில் பேட்டி அளித்துள்ள எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிக்க வேண்டும் என மதிமுக எம்.பிக்களுக்கு கட்சி கொறடா கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அறிவித்துள்ளனர்.
இது கட்சி கொறடாவின் உத்தரவை மீறும் செயல். ஒருஎம்.பியோ அல்லது எம்.எல்.ஏவோ, அந்தக் கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட முடியாது. அப்படி மீறினால் அவர்களது உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும்.
எனவே எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சி கொறடாவின் உத்தரவை மீறும் வகையில் பேசியுள்ளதால் இருவரையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு கோரிக்ைக விடுத்து கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.
மதிமுகவிலிருந்து செஞ்சியாரும், எல்.கணேசனும் நீக்கப்பட்டுள்ளனர். வைகோ தலைமையிலான மதிமுகதான் உண்மையான மதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் வழியில் நாங்கள் இருவரும் வாக்களிப்போம் என சமீபத்தில் எல்.கணேசன் தெரிவத்திருந்தார்.
இதையடுத்து இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.