ஐஏஇஏவிடம் இன்று மேனன் விளக்கம்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்ட நிலையில், வரும் 22-ந் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருகிறது.
இந்த நிலையில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் உள்ள 35 உறுப்பினர்களிடையே பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்தியாவின் சார்பில் எஸ்.எஸ். மேனன் நேரில் விளக்கம் அளித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதற்காக ஏற்கனவே அமெரிக்கா தனது விசேஷ தூதராக வில்லியம் பர்ன்ஸையும் வியன்னாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவரும், ஒப்பந்தம் நிறைவேறுவதற்காக இந்தியாவுக்கு உதவி செய்யவுள்ளார். மேனன் உரை நிகழ்த்தும்போது பர்ன்ஸும் உடன் இருப்பார்.
வரும ஆகஸ்ட் 1-ந் தேதி சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான உடன்பாடு குறித்து விவாதிக்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.