அரசுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு உறுதியானது
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தங்களது ஆதரவை சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
சிறு கட்சிகளின் ஆதரவை திரட்டி வரும் காங்கிரஸ் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் உத்தரவாதம் கொடுத்து ஆதரவை உறுதி செய்து வருகிறது.
சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஐந்து எம்.பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸிடம் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என சிபுசோரன் நிபந்தனை விதித்தார். இதுதவிர இணை அமைச்சர் பதவி ஒன்றும் தேவை எனவும் அவர் நிபந்தனை விதித்தார்.
ஆனால் சோரனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரலாம் என காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் இழுபறி நிலவி வந்தது. இதனால் சிபு சோரன்தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிபுசோரன் கட்சி தற்போது தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் கொறடா, தனது கட்சி எம்.பிக்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கட்சி எம்.பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு அரசுக்கு உறுதியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு குறித்து அதன்கொறடா கூறுகையில், மதவாத சக்திகளை ஒருபோதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்காது என்றார்.