வீட்டுமனைக்காக அவதிப்படும் காமராஜரின் தங்கை மகள்
விருதுநகர்: வீட்டுமனை பட்டா கோரி பல முறை மனு கொடுத்தும் கிடைக்காமல் கண்ணீர் மல்க தவித்து வருகிறார் பெருந்தலைவர் காமராஜரின் தங்கை மகள்.
தேசம் போற்றும் உன்னத தலைவர்களில் முக்கியமானவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி செய்தவர். தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை தந்த அரசியல் மகான். எளிமையான அவரது வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம். ஆனால் அப்படி யாரும் இல்ைல என்பது வேறு விஷயம்.
அவரது தங்கை நாகம்மாள். இவரது மகள் கமலாதேவி. தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.
காமராஜர் நினைவு இல்லத்தை ஒட்டி தனியாக குடியிருந்து வருகிறார் கமலாதேவி. இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சத்திர ரெட்டியாபட்டி ஹவுசிங் போர்டில் ஒரு குடியிருப்பும், உதவித் தொகையாக ரூ.2 லட்சமும் வழங்கினார். அந்த குடியிருப்புக்கு ஆண்டுக்கு ரூ.248 வரியாக கமலாதேவி செலுத்தி வருகிறார்.
வீட்டைக் கொடுத்த புண்ணியவான்கள் அதற்குரிய பட்டாவைத் தரவில்லை. பட்டா கோரி பல முறை அரசு உயரதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார் கமலா தேவி. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார் கமலா.
பட்டாவைக் கொடுத்து கமலாதேவியின் கவலையைத் துடைப்பார்களா உரியவர்கள்?
--