இடதுசாரிகள் - பகுஜன் - 3வது அணி இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.ஆரம்பத்தில் அரசை தோற்கடிப்பதற்கான முயற்சிகளே சூடு பிடித்திருந்தன. தற்போது அடுத்த பிரதமர் குறித்து எதிர் அணியினர் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். மாயாவதியை அடுத்த பிரதமர் என்று இடதுசாரி தலைவர்களும், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திக் கூற ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி உடைய ஆரம்பித்துள்ளது. இதுவரை நான்கு எம்.பிக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முக்கிய திருப்பமாக சமாஜ்வாடியின் பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி கட்சியிலிருந்து விலகி மாயாவதி முன்னிைலயில் பகுஜன்சமாஜ்கட்சியில் சேருவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் மாயாவதியை அடுத்த பிரதமராக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், மன்மோகன் சிங் அரசை எப்படி தோற்கடிப்பது என்ற வியூகத்தை இறுதி செய்யவும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், 3வதுஅணி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மாயாவதி தலைமையில் இடதுசாரிகள், 3வது அணியினர் இணைந்து மெகா 3வது அணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
அரசுக்கு இதுவரை ஆதரவாக இருந்து வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தற்போது 3வது அணிக்கு திரும்பியுள்ளது. இக்கட்சிக்கு 3எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் முகாமிட்டு மாயாவதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதேபோல சந்திரபாபு நாயுடுவும் டெல்லியில் முகாமிட்டு மாயாவதிக்கு ஆதரவாக கட்சிகளைத் திரட்டி வருகிறார்.
3வது அணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சிகளின் இந்த அதி வேக செயல்பாடுகள், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.