For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு ஏழை மக்கள் மீது பைத்தியம்-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: என்னை பைத்தியக்காரன் என்கிறார்கள். பைத்தியத்தில் பல வகை உண்டு. சிலருக்கு பண பைத்தியம், சிலருக்கு பதவி பைத்தியம், சிலருக்கு செங்கோல் பைத்தியம், ஆனால். எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சத்தீவு பிரச்னையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக குரல் கொடுப்போம் என திமுக உண்ணாவிரதத்தை துவக்கிவைத்து முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். ஆனால், என்னை பைத்தியக்காரன் என்றும் என் விலாசத்தை காட்ட முயற்சிப்பதாகவும் என் மீது அமைச்சர்கள் வசை பாடியுள்ளனர்.

மீனவர் பிரச்னையில் மக்கள் சார்பில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்காதது மட்டுமல்ல, வேண்டுமென்றே தவறான தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன.

1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்ததாகவும் எவ்விதமான சூசகமான தகவலையும் அவர்கள் அறிவிக்கவில்லை என்றும் கருணாநிதி கடந்த 19ம் தேதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 18ம் தேதி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், அன்றைய பிரதமர் இந்திரா சமாதானம் செய்து கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைக்கெல்லாம் வழிவகுத்து விதிகள் செய்யப்பட்டன என்று கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.

'மீன்பிடி தகராறுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் சூரியநாராயணன் எழுதிய புத்தகத்தில், "இந்திரா எடுத்த நிலைப்பாட்டில் கருணாநிதி மகிழ்ச்சி அடையாவிட்டாலும், இந்தப் பிரச்னையில் அவர் மோதல் போக்கை விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அன்று எம்.ஜி.ஆரின் செல்வாக்கால் கருணாநிதி தனக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இந்திராவின் முக்கிய ஆதரவு தேவைப்பட்டது'' என்றும் கூறியுள்ளார்.

அன்றைய அரசியல் சட்ட நிபுணர் செதல்வாட், கச்சத்தீவை இந்திய அரசு தருவது சட்டப்படி தவறு என்று கூறியதையும் பேராசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்ததில், தான் எந்தவிதத்திலும் உடந்தையாக இல்லை என்று கூறும் கருணாநிதி, தன்னை உதாசீனப் படுத்திய மத்திய அரசை எதிர்த்து அன்று ஒரு உண்ணாவிரதம் கூட இருக்கவில்லையே ஏன்?.

1974ம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு 1976ம் ஆண்டு நெருக்கடி காலத்தில் கடிதங்களின் பரிமாற்றம் மூலம் மீன்பிடி உரிமைகள் பறிபோய்விட்டன என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கடந்த 34 ஆண்டுகளில் கருணாநிதி இந்த மீனவர்களுக்காக என்ன செய்தார்?. மீனவர்கள் வடித்த கண்ணீர் அவருக்கு தெரியவில்லையா?. கருணாநிதியின் ரிமோட் கன்ட்ரோலில் தான் மத்திய அரசு இயங்குகிறது என்று ஒரு அமைச்சரே பேசியிருக்கிறார். அதை இயக்கி கச்சத்தீவை மீட்டிருக்கலாமே?.

அதை விடுத்து, இப்போது திமுக உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம்.

என்னை பைத்தியக்காரன் என்கிறார்கள். பைத்தியத்தில் பல வகை உண்டு. சிலருக்கு பண பைத்தியம், சிலருக்கு பதவி பைத்தியம், சிலருக்கு செங்கோல் பைத்தியம், ஆனால். எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம்.

என்னை அவ்வாறு அழைத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஏழை மீனவர்களுக்கு நான் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை விலாசம் தேடும் முயற்சி என்று கொச்சைப்படுத்துகின்றனர்.

விலாசம் தேட வேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள் என்னை வைக்கவில்லை. பலருக்கு விலாசம் தேடித் தரும் நிலையிலேயே மக்கள் என்னை வைத்துள்ளனர். ஆனால், பதவி போனால் பலர் விலாசம் இல்லாமல் போய்விடுவர் என்பது மட்டும் உறுதி என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X