பரஸ்பரம் குதிரைபேர புகார்-அவையில் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: பிரதமரின் அலுவலகம் எம்பிக்களை விலைக்கு வாங்கும் அலுவலகமாக மாறிவிட்டதாக பாஜக மக்களவையில் குற்றம்சாட்டியது.
அதே நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க பாஜக தங்களுக்கு பணம் தர முன் வந்ததாக ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களான பப்பு யாதவ், சையத் சகாபுதீன் இருவரும் குற்றம் சாட்டினர். இந்த இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாஜக-ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் அமளி ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
முன்னதாக பாஜக எம்பியான மல்ஹோத்ரா பேசுகையில்,
எம்பிக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற காங்கிரஸ் முயல்கிறது. குறிப்பாக பிரதமரின் அலுவலகமே குதிரை பேரம் பேசும் அலுவலகமாக மாறிவிட்டது என்றார்.
இதற்கு காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெல்லப் போவதும், தங்களுக்கு தோல்வி கிடைக்கப் போவதும் உறுதியாகிவிட்டதால் பாஜக இது போன்ற குற்றச்சாட்டைக் கூறி தப்ப முயல்வதாக காங்கிரஸ் எம்பிக்கள் கூறினர்.
அப்போது எழுந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களான பப்பு யாதவ், சையத் சகாபுதீன் இருவரும், பாஜக என்ன ஒழுங்கான கட்சியா?. காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க பாஜக தங்களுக்கு பணம் தர முன் வந்தது. இதனால் நேர்மை, நியாயம் பற்றி நீங்கள் பேசக் கூடாது என மல்ஹோத்ராவை நோக்கிப் பேசினர்.
இதையடுத்து பாஜக-காங்கிரஸ், ஆர்ஜேடி எம்பிக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
10 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவை கூடி விவாதம் தொடர்ந்தது.
காங். பணம் தர முயன்றது-பிஜேடி எம்பி:
இதற்கிடையே அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு பணம் தர சிலர் முன் வந்ததாக ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தள எம்பியான அர்ச்சனா நாயக் கூறியுள்ளார்.
இந்தக் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.