'ஹைட் ஆக்ட்' ஆபத்து-சிவசேனா எச்சரிக்கை
டெல்லி: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மிகப் பெரிய ஆபத்து ஹைட் ஆக்ட் சட்டம்தான். அமெரிக்க சட்டமான இது நம்மைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் உள்ளது என சிவசேனா கூறியுள்ளது.
அக் கட்சியின் உறுப்பினர் ஆனந்த் கங்காராம் கீதே மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசுகையில்,
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் அரசு தீவிரமாக இருப்பதைப் பார்த்தால், 2வது கிழக்கிந்திய கம்பெனியை நாட்டுக்கு அழைத்து வர அரசு ஆசைப்படுகிறதோ என்று தோன்றுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் ஹைட் ஆக்ட் சட்டம்தான். அமெரிக்க நாட்டின் சட்டமான இது நம்மைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் மின் உற்பத்தி பெருகும், எங்கும் மின் தடை இருக்காது, கிராமங்கள் அனைத்தும் மின் வசதி பெறும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அத்தனையும் பொய்யாகும்.
தற்போதைய நிலையில்,நாட்டில் உள்ள 45 சதவீத கிராமங்களுக்கு மின் விநியோகம் இல்லை. அணு மின்சாரத்தால் இத்தனை கிராமங்களையும் எப்படி உடனடியாக மின் விநியோக கட்டமைப்பின் கீழ் அரசு கொண்டு வர முடியும்.
அணு மின்சாரம் மிகவும் செலவு நிறைந்தது. அதற்குப் பதிலாக நீர் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து விட்டதாக அரசு கூறியது. ஆனால் புதிய விவசாயன் கடன் தருவதை நிறுத்தி விட்டனர். எனவே மறுபடியும் தற்கொலைகள் தொடர ஆரம்பித்துள்ளன.
எனது இந்த குற்றச்சாட்டு தவறு என்று அரசு நிரூபித்தால் நான் எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார்.