மாயாவதிதான் சிறந்த மாற்று சக்தி: இடதுசாரிகள்-3வது அணி
நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி உருவான இந்த புதிய 3வது அணியால், கட்சிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடிந்ததே தவிர, அரசை வீழ்த்த முடியாமல் போய் விட்டது.
இந்தப் புதிய சூழலில் டெல்லியில்உள்ள மாயாவதியின் வீட்டில் புதிய 3வது அணியின் தலைவர்கள் கூடி இன்று ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், தேவே கெளடா, குமாரசாமி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அடுத்த கட்டமாக புதிய 3வது அணியை மாயாவதி தலைமையில் அமைப்பது, ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து புதிய அரசியல் சக்தியாக மலருவது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பிறகு நிருபர்களை சந்தித்த இந்த தலைவர்கள் கூறுகையில்,
இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறோம். காங்கிரஸ், பாஜகவுக்கு மாயாவதி தான் மாற்று சக்தி என்றனர்.
பிரகாஷ் காரத் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றி அநீதியானது. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மன்மோகனின் அரசு நீதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது என்றார்.
சந்திரபாபு நாயுடு கூறுகையில், சிபிஐயை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டித்தும் நாடு முழுவதும் விரைவில் பிரசாரம் செய்யப்படும் என்றார்.
3வது அணிக்கு திடீர் ஆதரவு கொடுத்த தேவெ கவுடா கூறுகையில், மாயாவதியுடன் கூட்டணி வைத்து அவரை பலப்படுத்துவோம். கர்நாடகாவில் 3வது அணியை பலப்படுத்தவோம் என்றார்.
நாயுடுவுடன் ஆந்திராவில் மோதி வரும் சந்திரசேகர் ராவ் கூறுகையில், பகுஜன் சமாஜூடன் சேர்ந்து பணிபுரிவேன் என்றார்.