தயாநிதியை நீக்க அழகிரி போர்க்கொடி?
சென்னை: திமுக கொறடாவின் உத்தரவுக்குப் பிறகு, தனியாக பேட்டி அளித்த தயாநிதி மாறனை உடனடியாக திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியை, மு.க.அழகிரி வலியுறுத்தியுள்ளாராம்.
மதுரை தினகரன் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு திமுக உயர்நிலைக் குழு அவரது அமைச்சர் பதவியை பறித்தது.
இதைத் தொடர்ந்து அழகிரி-சன் தரப்புக்கும், மாறன் சகோதரக்கள்-முதல்வர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையிலான பிரிவு பெரிதாகிக் கொண்டே வருகிறது.
சமீபத்தில் அழகிரி ஆரம்பித்த ராயல் கேபிள் விஷனுக்கும் சுமங்கலி கேபிள் விஷனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
ஆனால், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் தொடர்ந்து திமுக எம்.பியாக நீடித்து வருகிறார் தயாநிதி மாறன். இந் நிலையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என திமுக கொறடா உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இதை தயாநிதி மாறன் ஏற்காமல் புறக்கணிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென பத்திரிக்கையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்தார் தயாநிதி மாறன். அப்போது, திமுக தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று அறிவித்தார்.
அப்போது மு.க.அழகிரியை வாரும் வகையில், திமுக வேட்பாளர்கள் 12 பேருக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தினேனா? முன்னாள் சபாநாயகரைத் தோற்கடிக்க வேலை செய்தேனா? என்று கேள்விகள் எழுப்பினார்.
இது அழகிரி தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை சந்தித்த அவர் தயாநிதி மாறனை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள் என்று தெரிவித்து விட்டு மதுரைக்குப் போய் விட்டாராம். தயாநிதியை நீக்கினால்தான் மீண்டும் சென்னை வருவேன் என்று அழகிரி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் தயாநிதியின் செயல் திமுக தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தயாநிதி மாறனின் பேட்டி தேவையில்லாத ஒன்று என்று திமுக தலைமை கருதுகிறதாம்.
இதனால் தயாநிதி கட்சியை விட்டு நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.