தங்கம் விலை ஒரே நாளில் ரூ.416 வீழ்ச்சி!
சென்னை: வழக்கமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு என்றுதான் செய்தி படித்திருப்பீர்கள். ஆனால், முதல்முறையாக அந்தச் செய்தி தலை கீழாகியிருக்கிறது.
ஆம், தங்கத்தின் விலை கடந்த இரு ஆண்டுகளில் முதல் முறையாக பவுனுக்கு ரூ.416 ரூபாய் வீழ்ச்சியடைந்து மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு திடீரென்று உயர்ந்ததால் இந்த விலை வீழ்ச்சி என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.9,008-க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 16-ந் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்து 48 என விலை போனது. இனி விலை குறைய வாய்பர்பில்லை என்பதால் அவசியமானவர்கள் மட்டும் தங்கம் வாங்கினர். மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்தபடி செல்ல முக்கிய நகரங்களின் நகைக் கடைகள் வெறிச்சாடின.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற முதல் நாளில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.416 குறைந்தது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.9,952-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.9,536 ஆகக் குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளில் ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.416 குறைந்துள்ளது இதுவே முதல் முறை.
இத்தனை நாட்களாக தொடரேந்து இறங்குமுகமாக இருந்த அமெரிக்கா டாலரின் மதிப்பு திடீரென்று நேற்று உயர்ந்தது. இதனால் தங்கத்தை ஸ்டாக் வைத்து இருந்தவர்கள் இதை விற்பனை செய்துவிட்டு அமெரிக்க டாலரை வாங்க தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு கூடியதால்தான் தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்று பிரபல நகை கடை அதிபர் ஒருவர் கூறுகிறார்.
மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்துவருவதும் கூட தங்கத்தின் விலைச் சரிவுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் பங்கு மார்க்கெட் வல்லுநர்கள்.
ஆனாலும் இன்று காலை தங்கத்தின் விலையில் மீண்டும் ஏறுமுகம் தெரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு ரூ.54 வரை விலை கூடியிருந்தது.