மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசு ஏற்பு?
இந்த விஷயத்தில் இறுதி முடிவை வரும் 29ம் தேதி தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன் தெரிவித்தார்.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும், ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள், பாஜக, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரித்து வருகிறது.
நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கையும் முக்கியம், இயற்கையும் முக்கியம். இயற்கைக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, நம்பிக்கைகள் புண்படும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.
இதை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும் என்றனர்.
இதற்குப் பதிலளித்த நாரிமன், இந்தத் திட்டத்துக்காக எந்தப் பாலத்தையும் நாங்கள் இடிக்கவில்லை. அப்படி எந்தப் பாலமும் அங்கில்லை. அந்தப் பாலத்தை ராமரே தனது அம்பால் சிதறடித்துவிட்டதாக பத்ம புராணமும், கம்ப ராமாயணமும் சுட்டிக் காட்டுகின்றன.
சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வருவதற்காக போடப்பட்ட பாலத்தை, இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் ராமர் இடித்து விட்டதாக கம்ப ராமாயாணம் கூறுகிறது. எனவே எந்தப் பாலத்தையும் இடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
இந் நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில்,
இந்தத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு துறைகளின் 18 கமிட்டிகளில் 17 கமிட்டிகள் சேது சமுத்திரக் கால்வாயை மாற்றுப் பாதையில் அமைக்கலாம் என்று கூறியுள்ளன.
ஒரே ஒரு கமிட்டி தான் ராமர் பாலத்தை உடைத்து கால்வாய் தோண்டலாம் என்று கூறியுள்ளது என்றனர்.
இதற்கு பதிலளித்த நரிமன், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் யோசனையை தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் இறுதி முடிவை வரும் 29ம் தேதி தெரிவிக்கிறோம் என்றார்.