எதிர்கட்சி எம்பிக்கள் ராஜினாமா-அத்வானி யோசனை
டெல்லி: பணம் கொடுத்து மத்திய அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதை கண்டித்து அனைத்து எதிர்கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் லோக்சபாவில் நடந்த நம்பி்க்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதற்காக 24 எம்பிக்களுக்கு கொடுக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், நேற்று முன் தினம் லோக்சபாவில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் கட்சி எம்பிக்களும் அதில் விலைபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபர்ஸ் ஊழல் விவகாரத்தை விட இது அதிக அதிர்ச்சியளிக்கிறது. எல்லா கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைத்தால் 1989ம் ஆண்டில் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் சேர்ந்து ராஜினாமா செய்ததுபோல இப்போதும் செய்யலாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு தப்பினாலும் சுமூகமாக செயல்பட முடியாது. பணம் கொடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசுக்கு பதவியில் நீடிக்க எந்த அருகதையும் இல்லை என்பதை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.