சபாநாயகர் பதவியில் நீடிப்பார் சோம்நாத்!
டெல்லி: கட்சி நடவடிக்கையால் சோம்நாத்திடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து சபாநாயகராக நீடிப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
கட்சியின் ராஜினாமா உத்தரவை சட்டை செய்யாமல், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சி தலைமை அவரை நீக்கினாலும், தொடர்ந்து சபாநாயகராக இருக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து சோம்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், கட்சி தலைமை கூறியபடி அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதனால் கட்சி அவர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டது. கட்சியின் நடவடிக்கையினால் அவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. சபாநாயகர் பதவியை அவர் விடமாட்டார் என்று தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் ஒன்று முதல் 10ம் தேதி வரை கோலாலம்பூரில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் 54வது கூட்டத்தில் சோம்நாத் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50 பிரதிநிதிகளை அவர் வழிநடத்தி செல்ல உள்ளார் என்று தெரிவித்தனர்.