கர்நாடகத்தில் ரஜினி படமே கூடாது-வாட்டாள்
குசேலன் படம் ரிலீஸாகவுள்ள நிலையில், அதை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் குரல் கொடுத்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. கன்னடர்களை விமர்சித்துப் பேசிய ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியானால்தான் குசேலனை ரிலீஸ் செய்ய விடுவோம் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கன்னட சாளுவாளி இயக்கத் தலைவரான வாட்டாள் நாகராஜ், ரஜினி படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மகாராஷ்டிரா. எனவேதான் அவரை பால் தாக்கரே ஆதரித்தும், பாராட்டியும் பேசுகிறார்.
ரஜினியின் படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடுகின்றன. எனவேதான் அவர் கன்னடர்களை திட்டிப் பேசுகிறார். தமிழக மக்களை சந்தோஷப்படுத்த கன்னட மக்களை திட்டுகிறார். ஓகேனக்கல் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ரஜினி.
எனவே ரஜினிகாந்த் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகத்தில் ஒரு தியேட்டரிலும் ஓட விட மாட்டோம். குசேலன் மட்டுமல்லாது எந்தப் படத்தையும் திரையிட விட மாட்டோம். தடை விதிக்க வேண்டும் என்றார் வாட்டாள்.
குசேலனுக்கு கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதைத் தாண்டி எப்படி குசேலன் கர்நாடகாவில் ரிலீஸாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை:
இதற்கிடையே, குசேலன் பட ரிலீஸின்போது ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை ஏதும் இல்லை என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படத்தின் போது கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. அப்படிஎதுவும் இல்லை.
இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தலைமை மன்றம் மூலமாக அளிக்கப்பட்டு வந்த டிக்கெட்டுகளில் 50 சதவிகிதம் மட்டும் குசேலன் படத்திற்கு அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒத்துழைத்து படம் வெற்றியடைய கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.