புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி- இலங்கை
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக இலங்கை அரசு சந்தேகப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கூறினார்.
இலங்கையில் தெற்காசிய மக்கள் சபை மாநாடு கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 80 பேர் சென்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் உள்பட 30 பேர் சென்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமேஸ்வரம் திரும்பிய மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பெனிக்கஸ் பெரேராவை சந்தித்து பேசினோம்.
எங்களது கோரிக்கையை கவனமாக கேட்டார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாது. அது விடுதலைப் புலிகளின் செயலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக சந்தேகம் உள்ளது. இந்திய மீன்பிடி படகுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர். மீனவர்கள் பிரச்னையை தீர்க்க இரு நாட்டு மீனவர்களும் கலந்து பேச வேண்டும்.
இலங்கை கடற்படையின் செயல்பாடு தமிழக மீனவர்களுக்கு ஆபத்தை உண்டாக்காது என்று அமைச்சர் கூறினார். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்றார் தேவதாஸ்.