தூத்துக்குடியில் 240 இலவச கலர் டிவிக்கள் எரிப்பு!!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரசின் இலவச கலர் டிவிக்களை மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மறவன் மடம் பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 240 கலர் டிவிக்கள் கடந்த மாதம் வந்தன. இவை பஞ்சாயத்து அலுவலகத்தின் கம்ப்யூட்டர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கீதா ஜீவன், கலர் டிவி வழங்கும் விழாவுக்கு வர தேதி தராததால் இந்த டிவிக்கள் இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டிவிக்கள் தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் 240 டிவிக்களும் எரிந்து சாம்பலாயின.
தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட (பொ) கலெக்டர் அன்பரசு, எஸ்பி தீபக்டமோர், டிஎஸ்பி நடராஜ மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எரிந்து சாம்பலான டிவிக்களை பார்வையிட்டனர். பஞ்சாயத்து அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து மறவன்மடம் பஞ்சாயத்து தலைவி கூறியதாவது, மறவன்மடம் பஞ்சாயத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 240 கலர் டிவிக்கள் வந்தன.
2-வது வார்டு உறுப்பினர்கள் அதிமுக பிரமுகர் செல்வராஜ், சமக பிரமுகர் அலெக்சண்டர் ஆகியோர் தூண்டுதலின் டிவிக்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜோசப் அலெக்சாண்டரையும், செல்வராஜையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எரிந்த 240 டிவிக்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 27,500 ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.