ஆற்காடு செயல்பாடு படுமோசம்-பாஜக
மேட்டுப்பாளையம்: தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது தற்காலிகமானதுதான். அவர்களுடைய வெற்றி தார்மீக வெற்றி அல்ல. பணம், பதவி, வாக்குறுதியால் பெறப்பட்ட வெற்றி.
தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டால் தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் என பல தரப்பினரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சட்ட விரோதம் என்று சொல்லும் கர்நாடக முதல்வரின் குற்றச்சாட்டை புறக்கணித்துவிட்டு தமிழக எல்லையில் இந்த திட்டத்தை செயல் படுத்த வேண்டும். இதற்கு தமிழக பாஜக முழுமையாக ஆதரவு தரும்.
தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.