மதிமுகவிலிருந்து எல்.ஜி-செஞ்சி நீக்கம்-வைகோ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுகவின் கட்டுப்பாட்டிற்கும், கண்ணியத்திற்கும் மாறாக செயல்பட்டதால் எல்.கணேசன் கழகத்தின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்தும், செஞ்சி ராமச்சந்திரன் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் 2007 ஜனவரி 10ம் தேதி கூடிய கழகத்தின் பொதுக்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள்.
கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அவர்கள் முயன்றதால் பிரச்சனையை இந்தியத் தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வைகோவை பொதுச் செயலாளராகக் கொண்டுள்ள அமைப்புதான் உண்மையான மதிமுக என்று கடந்த மே மாதம் 30ம் தேதியன்று தீர்ப்பளித்தது.
2008 ஜூன் 21, 22ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மதிமுக முடிவு செய்து அறிவித்தபோது, அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கழக நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கு விரோதமாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளதால், அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
அதே போல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் பொன். சேதுராமன், போடிநாயகன்னூர் நகரச் செயலாளர் ஆரோசெல்வன் ஆகியோரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்.