சமணர் குகை அருகே கல்குவாரி-நீதிமன்றம் தடை
மதுரை: சமணர் குகை அருகே கல்குவாரி நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம், கீழவளவை பகுதியைச் சேர்ந்த பாண்டி, மகபூபாட்ஷா, புவனேஸ்வரி ஆகியோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது
எங்கள் ஊரில் மிக பழமையான வரலாற்று சின்னங்கள் கொண்ட மலை உள்ளது. அதில் சமணர் குகைகளும் உள்ளன. சமணர் குகை அருகிலேயே குவாரி அமைக்க கனிமவளத்துறை தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால் பஞ்சபாண்டவர் குகை, சமணர் குகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்குவாரி நடத்த 2 வாரத்துக்கு தடை விதித்தனர்.
மேலும், தமிழ்நாடு கனிமவளத்துறை தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.