சோம்நாத்தை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை: காரத்
ஹைதராபாத்: சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியை விட்டு நீக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடனேயே சோம்நாத் சாட்டர்ஜி தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.
ஆனால் கட்சியின் சிந்தனையோடு சோம்நாத் சாட்டர்ஜி ஒத்துப் போகவில்லை. எனவேதான் சோம்நாத்சாட்டர்ஜி மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்க பொலிட்பீரோவுக்கு மத்திய குழு அதிகாரம் அளித்தது.
பதவி விலகுமாறு அவரிடம் கூறியபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். எனவேதான் அவரை கட்சியிலிருந்து நீக்கினோம்.
சோம்நாத் சாட்டர்ஜியை நீக்கியது துரதிர்ஷ்டவசமான ஒன்று. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. சபாநாயகர் பதவியில் நீடிப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவுசெய்வேன் என்று சோம்நாத் கூறினால், கட்சியில் அவர் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம்.
பொலிட்பீரோ முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய குழுவிடம் சோம்நாத் சாட்டர்ஜி அப்பீல் செய்யலாம் என்றார் காரத்.