நம்பிக்கை வாக்கு: நேயர்கள், வருவாயை அள்ளிய டிவிகள்!
மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் குறிப்பாக இந்தி மற்றும் ஆங்கில செய்தி சேனல்கள் செமத்தியான வருவாயையும், பார்வையாளர்களையும் ஈட்டியுள்ளன. இந்தி சேனல்களுக்குத்தான் இதில் சரியான லாபம்.
சுனாமி ஏற்படுத்திய பரபரப்பை விட ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மிகுந்த பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தி விட்டது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது அத்தனை வேலைகளையும் ஒத்தி வைத்து டிவி முன் அமர்ந்து லோக்சபா நிகழ்ச்சிகளை பார்த்துள்ளார்.
கர்நாடக மேலவைக் கூட்டத்தையும் இந்தக் காரணத்திற்காக அன்று ஒத்தி வைத்து விட்டனர். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் உள்ள அத்தனை இந்தியர்களையும் பதறடித்து விட்டது நம்பிக்கை வாக்கெடுப்பு.
இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம் நம்ம ஊர் டிவி சேனல்கள்தான். இந்தியாவில் உள்ள அத்தனை இந்தி மற்றும் ஆங்கில சேனல்கள் சரமாரியாக லைவ் செய்து நொடிக்கு நொடி நிலவரத்தை அப்டேட் செய்தபடி இருந்தனர்.
அன்றைய தினம் ஆங்கிலம் மற்றும் இந்தி சேனல்களின் வருமானமும், நேயர்களின் பார்வை பங்கும் பல மடங்கு அதிகரித்திருந்ததாம். இந்தி சேனல்களின் நேயர் பங்கு அன்று மட்டும் 48 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல ஆங்கில சேனல்களுக்கு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏமேப் என்கிற டிவி நேயர் தர வரிசை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தி சேனல்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஆஜ்தக். இந்த டிவியை மட்டும் 99 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இரண்டாவது இடத்தில் இந்தியா டிவி வருகிறது.
ஆங்கில சேனல்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்டிடிவி 24x7. இதை 43 லட்சம் பார் பார்த்துள்ளனர். டைம்ஸ் நவ் டிவிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
வழக்கமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு அல்லது சம்பவம் இருந்தால் அது டிவி சேனல்களில் முக்கியத்துவம் பெறுவது வழக்கம்தான். அப்போது இதுபோல நேயர்கள் பெருக்கமும் ஏற்படுவது சாதாரணம்தான் என்கின்றனர் மீடியா ஆய்வாளர்கள்.
இதுகுறித்து டைம்ஸ் நவ் டிவியின் தலைமை எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், முக்கியச் செய்திகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு என்பதை இது நிரூபித்துள்ளது. இது மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்வாகும் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பால் டிவி சேனல்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான். நேயர் எண்ணிக்கை கூடியதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் நல்ல வருவாயையும் டிவி சேனல்கள் ஈட்டியுள்ளன.
இப்படி இந்தி மற்றும் ஆங்கில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்ட செய்தியாளர்களை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கியபோது, தமிழ் செய்தி சேனல்கள் மட்டும் வழக்கம் போல அழுது வடிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.