பெங்களூர் எதிரொலி: தமிழகம் முழுவதும் உஷார் நிலை
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் பகுதியில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டுளை கண்டறியும் சாதனங்களுடன் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
சென்னை நகரில் மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் போலீஸார் தீவிரகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கட்டடங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றில் முன்பே வெடிகுண்டுகளைக் கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அங்கும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கோவையிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான வகையிலான பொருட்களை பொதுமக்கள் தொட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதியில் உஷார் நிலை:
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருப்பதிக்குள் நுழையும் வாகனங்கள், திருப்பதியை விட்டு வெளியேறும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
திருப்பதி எல்லையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய்கள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
திருப்பதி பஸ் நிலையம், விமான நிலையம், தேவஸ்தான அலுவலக வளாகம், பக்தர்கள் தங்குமிடங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.