For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு பாக். எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Nuclear
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும், அமெரிக்காவும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம், தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலுக்கு வழி வகுக்கும். எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கூறி சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு பாகிஸ்தான் திடீரென கடிதம் எழுதியுள்ளது.

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்களுக்கும், என்.எஸ்.ஜி. அமைப்பில் உள்ள நாடுகளுக்கும் இந்தக் கடிதங்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அது கோரியுள்ளது.

ஐ.நா. மற்றும் சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கான பாகிஸ்தானின் நிரந்தப் பிரதிநிதிகள் இந்த கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த ஒப்பந்தம் இந்தியாவை அணு ஆயுத சக்தியாக அங்கீகரிக்க வழி செய்கிறது. மேலும் பல அணு ஆயுத சோதனைகளை இந்தியா நடத்துவதற்கும் வழி வகுக்கும் வகையில் உள்ளது. இதனால் தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலும், அணு ஆயுதப் போட்டியும் உருவாகும். இதனால் இப்பிராந்தியத்தில் அமைதி கெடும். பதட்டம் அதிகரிக்கும்.

இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவுக்கு விதி விலக்கு சலுகையை அளிக்க வேண்டும் என்று கோருவது ஏற்க முடியாத, நியாயமற்ற கோரிக்கையாகும். இது மிகவும் அபாயகரமானதாகும்.

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் விதிமுறைப்படி, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு ஒப்பந்த நகல் சுற்றுக்கு விடப்பட்டு 45 நாட்கள் கழித்துதான் அதை பரிசீலிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு முன்பு பரிசீலிக்கக்கூடாது.

ஆனால் ஆகஸ்ட் 1ம் தேதி இந்த வரைவு ஒப்பந்தம் குறித்து போர்டு உறுப்பினர்கள் பரிசீலிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சரியல்ல. இந்தியாவுக்காக இந்த விதிமுறையை மாற்ற முயல்வது சரியான செயலன்று.

அனைத்து உறுப்பினர்களும் ஒப்பந்த நகலை முழுமையாக படித்தறிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அவசரம் காட்டக் கூடாது.

தற்போது உள்ள ஒப்பந்தம் சரியானதாக இல்லை. எனவே இதை முழுமையாக ஆய்வு செய்ய அவகாசம் தேவை.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள, சர்வதேச எரிபொருள் சந்தையை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான நிபந்தனைகள், தேவைப்பட்டால் இந்தியா திருத்த நடவடிக்ைககளை மேற்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஏற்புக்குரியதல்ல.

இதன் மூலம் சிவிலியன் பயன்பாட்டுக்கு என்று கூறி இந்தியா பெருமளவில் அணு எரிபொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டு, அதை ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தக் கூடும். தேவையான அளவுக்கு எரிபொருட்களை குவித்து வைத்துக் கொண்ட பின்னர் ஒப்பந்தத்தை அது முறித்துக் கொள்ளவும் முயலலாம். இது மிகவும் அபாயகரமானதாகும்.

மேலும் முன்பை விட அதிக அளவில் இந்தியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் உதவி செய்யும் வகையில்உள்ளது.

இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிந்து விடும் என்று எந்த அம்சமும் ஒப்பந்தத்தில் இல்லை என்று பாகிஸ்தான் தனது கடிதங்களில் கூறியுள்ளது.

ஆனால் இந்த பயம் தேவையில்லாத ஒன்று என்று இந்தியாவும், அமெரிக்காவும் மறுத்துள்ளன.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவல் ஏற்படும் என பாகிஸ்தான் கூறியிருப்பது தேவையற்ற ஒன்று. இந்த ஒப்பந்தம் முற்றிலும் அணு மின்சாரம் தொடர்பானதே. ராணுவ நடவடிக்கைக்கும் இந்த ஒப்பந்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இந்த ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவில்லை என்றார் முகர்ஜி.

இதேபோல அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் கூறுகையில், பாகிஸ்தான் கவலையில் அர்த்தம் இல்லை. இது பாகிஸ்தானுக்கோ அல்லது தெற்காசிய பிராந்தியத்திற்கு எந்தவித மிரட்டலையும் கொடுக்கும் ஒப்பந்தம் இல்லை.

இந்த ஒப்பந்தத்தை நேர்மறையாகவே பாகிஸ்தான் பார்க்க வேண்டும். ஒப்பந்தத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X