எம்பி்க்களுக்கு லஞ்சம்-சிக்குகிறார் அமர்சி்ங்கின் முன்னாள் பிஏ?
டெல்லி: 3 பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதில் பங்கேற்காமல் இருக்க தங்களுக்கு தலா ரூ. 3 கோடி லஞ்சம் பேசப்பட்டு, முன் பணமாக ரூ. 1 கோடி தரப்பட்டதாக பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கல், பக்கன்சிங் குலாஸ்தி, மகாவிர் பகோரா ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இந்தப் பணத்தை சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கொடுத்ததாகக் கூறி அதை மக்களவையில் வந்து கொட்டினர்.
இது தொடர்பான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாக சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும் அந்த வீடியோ ஆதாரத்தை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் வழங்கியது.
இதை நேற்று சோம்நாத் சட்டர்ஜி போட்டுப் பார்த்ததாகத் தெரிகிறது.
பதிவாகி இருப்பது என்ன?:
கடந்த செவ்வாய்க்கிழமை (22ம் தேதி), டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள அமர்சிங்கின் வீட்டுக்குள் பாஜக எம்.பி.க்கள் 3 பேரும் செல்கின்றனர்.
அவர்களிடம் ஒருவர் வந்து பேசுகிறார். கட்டுக் கட்டாக பணம் தருகிறார்.
இந்தப் பணத்தைத் தந்தவர் சஞ்சீவ் சக்சேனா என பாஜக எம்பிக்கள் கூறியுள்ளனர். அவரது முகம் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் அவரோ, பாஜக எம்.பி.க்களோ மற்றவர்களோ பேசுவது தெளிவாக கேட்கவில்லை.
அதே போல அந்த வீடியோவில் அமர்சிங்கின் முகமும் இல்லை.
பின்னர் சக்சேனா முன்னிலையில் எம்.பிக்கள் 3 பேரும் பணக் கட்டுகளை வெளியே எடுத்து சரிபார்க்கிறார்கள். பின்னர் அமர்சிங்கின் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். பின்னர் அவர்கள் சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது என்கின்றனர்.
இந்த சஞ்சீவ் சக்சேனா அமர்சிங்கின் முன்னாள் செயலாளர் என்று கூறப்படுகிறது. அவரை அமர்சிங் பல காலத்துக்கு முன்பே பதவி நீக்கிவிட்டார். இப்போது அவரை வைத்து இந்த வீடியோ நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்று சமாஜ்வாடி தரப்பு கூறுகிறது.
இந்த வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்ப சபாநாயகர் விரும்பினால் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபணை இல்லை என்று அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார்.
ஒரு முதலமைச்சரின் மனைவியும், மிகப் பெரிய வர்த்தகர் ஒருவரும் இணைந்து தொழில் செய்வதாகவும், அந்த வர்த்தகர்தான் இந்த லஞ்ச நாடக வீடியோவின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் இந்தூர் ஸ்டேட் பாங்க் முத்திரை உள்ளதாகவும் கூறப்படுகிறது என்றார் ஷகீல் அகமது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவேண்டும் என்று சபாநாயகர் கூறினால் அதை வரவேற்போம், அவருக்கு உதவிவோம் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.