பெங்களூர் குண்டுவெடிப்பு- சந்தேக வாலிபர் 'ஸ்கெட்ச்' வெளியீடு
பெங்களூர்: பெங்களூரில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை வைத்தது சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் என நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி கூறினார்.
அவரைப் பார்த்தவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில், கம்ப்யூட்டர் உதவியோடு வரையப்பட்ட அந்த வாலிபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோரமங்களா போரம் மால் அருகே குண்டு செயலிழக்கச் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இன்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டு ஒரு பூத் தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதை வைத்தது தொடர்பாக சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
இன்றைக்குள் துப்பு துலங்கும்-முதல்வர்:
இதற்கிடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதை இன்று மாலைக்குள் போலீஸார் கண்டுபிடிப்பார்கள் என முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று மாலைக்குள் இந்த வழக்கில் முக்கிய துப்பு துலங்கும். சதிச் செயலுக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு விடும்.
மத்திய அரசிலிருந்து வரவுள்ள உயர் மட்டக்குழு எந்த நேரத்திலும் பெங்களூர் வந்து சேரலாம் என்றார்.
உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறுகையில், அனைத்துக் கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் சதி இதில் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே, இந்த செயலுக்குக் காரணமானவர்கள் மிகவும் திறமையான, முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என டிஜிபி ஸ்ரீகுமார் கூறியுள்ளார். இந்த நிலையில், சதிச் செயல் குறித்த முக்கிய தகவல்களை தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.