சிரஞ்சீவி பயம்: நெருங்கும் நாயுடு-டி.ஆர்.எஸ்
ஹைதராபாத்: சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கவுள்ளதால் அதை சமாளி்க்க தனி மாநிலம் கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தயாராகி வருகிறார்.
இதற்காக இதுவரை தனி தெலுங்கானா மாநிலத்திற்கு எதி்ர்ப்பு தெரிவித்து வந்த நாயுடுவின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனி தெலுங்கானா மாநில கோரிக்கைய ஏற்பதாக அறிவித்தால் தெலுங்கு தேசத்துடன் கூட்டணிக்குத் தயார் என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவும் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில், தெலுங்கானா மாநிலம் குறித்து பரிசீலிப்போம் என்று காங்கிரஸ் கூறியதை நம்பி அக்கட்சியுடன் கூட்டணி வைத்தார் ராவ். ஆனால் டி.ஆர்.எஸ். உதவியுடன் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் தெலுங்கானாவை மறந்து விட்டது.
இதனால் கோபமடைந்த ராவ், காங்கிரஸுடன் இருந்து வந்த கூட்டணியை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் பதவிகளை ராஜினாமா செய்து இடைத்தேர்தலை சந்தித்தார். ஆனால் அதில் அவருக்கு பெருத்த அடி விழுந்தது.
இந் நிலையில், தற்போது மாயாவதியை பிரதமராக்குவோம் என்று கூறி 3வது அணியில் இணைந்தார் ராவ். ஆனால், இதில் நாயுடுவும் இணையவே ராவ் கடுப்பில் இருந்தார்.
அவர்களிடையே மனக் கசப்பை போக்க மாயாவதி எடுத்த நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாகத் தெரிகிறது. இப்போது இரு கட்சிகளும் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்துள்ளன.
நாயுடு கூறுகையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி அமைப்பது பற்றி எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.