லஞ்சம்: சபாநாயகர் அலுவலகம் குறித்துக் கூறவில்லை-எச்சூரி
நேற்று திருச்சி வந்த சீதாராம் எச்சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளிக்க வேண்டும் என எம்.பிக்களுக்குப் பணம் வழங்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் அலுவலகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்தும், மீடியாக்களிலிருந்தும் செய்திகள் வந்துள்ளன.
சபாநாயகர் அலுவலகம் மூலமாகவே பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் பணப் பட்டுவாடா செய்யும் மையமாக செயல்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டால் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். எவ்வளவு சீக்கிரம் உண்மை வருமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது.
பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த நெருக்கடியான நேரத்தில் பொதுமக்கள் வதந்திகளுக்கு இரையாகி விடக் கூடாது. இது தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் செயல்.
பண வீக்கம் குறித்து, நாடு தழுவிய அளவிலான விழிப்புணர்வுப் பிரசாரத்தை சிபிஎம் மேற்கொள்ளும். பண வீக்கம் .02 சதவீதம் குறைந்திருந்தாலும், இதனால் எந்தவித சாதகமான நிலையும் ஏற்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவில்லை.
எங்களது விழிப்புணர்வுப் பிரசாரத்தில் அணு ஒப்பந்தம் குறித்தும், அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும், சிபிஐ, வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டும் அரசு செயலையும் அம்பலப்படுத்திப் பேசுவோம். அடுத்த தேர்தலுக்குள் 3வது அணி முழுமை அடையும். வலுவடைந்து விடும்.
தன்னைக் கொத்தடிமையாக வைத்திருக்க இடதுசாரிகள் முயன்றதாக பிரதமர் கூறியுள்ளதில் உண்மை இல்லை. உண்மையில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்ைத செயல்படுத்த வேண்டும் என்பதில்தான் நாங்கள் தீவிரமாக இருந்தோம். ஆனால் அரசு அதை மறந்து விட்டது
பொது விநியோக முறை இன்னும் சீராக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட வேண்டும். ஊக வணிகம் நிறுத்தப்பட வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளின் ரூ. 70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து விட்டதாக அறிவித்தது. ஆனாலும் விவசாயிகளின் நெருக்கடி இன்னும் தீரவில்லை. தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன
என்று கூறியிருந்தார்.
ஆனால் தான் இவ்வாறு கூறியதை எச்சூரி இன்று மறுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியிலிருந்து அவர் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளனர். நான் பேட்டியின்போது என்ன கூறினேன் என்றால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் எம்.பி.,க்களிடம் லஞ்சம் விளையாடிய வீடியோ டேப்புகள் சபாநாயகர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உண்மை வெளியானதும் தான், வீடியோ ஆதாரங்கள் குறித்த நம்பகத்தன்மை புரிய வரும். வீடியோ ஆதாரங்கள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும். இதுவே நான் பேசியது. இதில் சபாநாயகர் அலுவலகத்துக்கு தொடர்பு உண்டு என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்று கூறியுள்ளார் எச்சூரி.