லஷ்கர் 'ஹிட் லிஸ்ட்டில்' மீனாட்சி அம்மன் கோவில்!
நாடு முழுவதும் அமைதியை சீர்குலைத்து, கலவரங்களை உண்டுபண்ணி இந்தியாவின் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
இதுவரை பொதுமக்களின் உயிரோடு விளையாடி வந்த தீவிரவாதிகள் தற்போது மத வழிபாட்டுத் தலங்களிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெரிய அளவிலான குண்டுவெடிப்பை ஏற்படுத்தி பெரும் பதட்டத்தை ஏற்படுத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் தவிர நாட்டில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் அது குறி வைத்துள்ளது.
இதுதொடர்பான தகவல் ரா மற்றும் ஐபி மூலம் மத்திய உள்துறைக்கு வந்துள்ளது. இதையடுத்து ஐபி இயக்குநர் பி.சி. ஹல்தார், தமிழக டிஜிபி ஜெயினுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளார்.
அதில் மீனாட்சி அம்மன் கோவில் லஷ்கர் அமைப்பின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், இவ்விஷயத்தில் தமிழக அரசு மிக அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் அந்த எச்சரிக்கை குறிப்பு வந்திருப்பதாக தமிழக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை போலீஸார் தவிர பக்கத்து மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் மதுரைக்கு வரவழைக்கப்படுகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என கோயில் நிர்வாகத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கோவிலின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுளளனர்.
பக்தர்களை கண்காணிப்பதோடு அவர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களும சோதனையிடப்படுகின்றன.
மதுரை தவிர நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.