அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள், பிரசாரங்கள்: ராஜா
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக அரசியல் சந்தர்ப்பவாதத்தில் ஈடுபட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஆட்சியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது. அதை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டங்களும், பிரசார இயக்கங்களும் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இடதுசாரிகளும், அதனுடன் அணி சேர்ந்து 10 கட்சிகளும் இணைந்து, தேசிய அளவில் பல்வேறு போராட்டங்களையும், தொடர்ச்சியான பிரசார இயக்கங்களையும் மேற்கொள்ளவுள்ளன.
இந்த போராட்டங்களின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், அரசின் தோல்வியையும் மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
வாக்குகளை பெறுவற்காக பண பலத்தை பயன்படுத்தவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தயங்காது என்பதையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிரூபித்துள்ளது.
இடதுசாரிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன்சமாஜ் கட்சி ஆகியவை அணி சேர்ந்துள்ளதைப் போல வரும் நாட்களில் மேலும் பல அரசியல் மாற்றங்கள் அரங்கேறும். காங்கிரஸ், அதை விட்டால் பாஜக என்கிற இருமுனை அரசியல் சூழலை எங்களது அணி மாற்றும் என்றார் அவர்.