மத்தியில் இந்து அரசு அமைய வேண்டும்-விஎச்பி
கோவை: மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால், பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா ஆகியோர் கூறியுள்ளனர்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர்கள்,
பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அமர்நாத் யாத்திரை விவகாரம் ஆகியவற்றில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
இந்துக்களுக்கு எதிராகவும் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் பாகி்ஸ்தான், பங்களாதேஷ் ஆதரவுடன் ஜிகாதி தீவிரவாதிகள் போரை ஆரம்பித்துவிட்டனர்.
மிக தாராளமான நாடான பிரிட்டனே மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து தான் தீவிரவாதத்தை அடக்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் கடும் சட்டங்கள் வரவே இல்லை. காரணம் ஓட்டு வங்கி அரசியல் தான்.
இரு தினங்களில் இந்தியாவில் 25 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.
ஜிகாதி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மத்திய அரசு துண்டித்தக் கொள்ள வேண்டும்.
தீவிரவாத வழக்குகளை கையாளும் போலீசாருக்கு அதிக சுதந்திரம் தரப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் நடத்த இருக்கிறோம்.
பேச்சுவார்த்தையாலோ, நீதிமன்ற தீர்ப்பாலோ அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியாது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினால் தான் அதைக் கட்ட முடியும். அதற்காக மத்தியில் ஒரு இந்து அரசு அமைய வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை தொடங்குவோம்.
பொடா சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.